திருவெற்றியூர்: மணலி மண்டலம் கொசப்பூரில் சிதிலமடைந்து காணப்படும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்காத அதிகாரிகள், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூரில், கடந்த 2012ம் ஆண்டு, கவுன்சிலர் நிதி ஒதுக்கீட்டில், 30 லட்சம் செலவில் நவீன உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டது. உடற்பயிற்சி சாதனங்கள், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வந்த இந்த உடற்பயிற்சி மையத்தை அப்பகுதி இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின்போது உடற்பயிற்சி மைய கட்டிடம் பலத்த சேதமடைந்தது. குறிப்பாக மேற்கூரை, ஜன்னல்கள் உடைந்தது. மேலும், மின் விளக்குகள், மின் விசிறிகளும் பழுதானது. இதனால், உடற்பயிற்சி கூடத்தை அப்பகுதி இளைஞர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த உடற்பயிற்சி மையத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என இப்பகுதி இளைஞர்கள் மணலி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் உடற்பயிற்சி கூடம் பூட்டியே கிடக்கிறது.