சென்னை : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் டிவிட்டரில் கண்டித்துள்ளனர். அதன் விவரம்: ரஜினிகாந்த்: காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுத்தது போதும்...இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கமல்ஹாசன்: ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசினேன். நாடு இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் உங்களின் மற்றும் உங்கள் குழுவினரின் பணிகளோடு தோளோடு தோளாக இருப்போம் என உறுதி அளித்தேன். விஷால்: புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் கண்டிக்கத்தக்கது. நாட்டுக்காக வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். பலியான வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.