காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர். இந்த நிலையில் சித்து நேற்று சண்டிகரில் அளித்த பேட்டியில் ` இந்த தாக்குதல் கோழைத்தனமான செயல். வன்முறை எப்போதும் கண்டனத்துக்கு உரியதே. அந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டையே (பாகிஸ்தான்) எப்படி குற்றம்சாட்டலாம்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரம், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை நேற்று பஞ்சாப் பேரவையில் கொண்டு வந்து பேசிய முதல்வர் அம்ரீந்தர் சிங், 12 நிமிடம் கண்ணீர் மல்க பேசினார். அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது. அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அமைதி பேச்சுவார்த்தை அழைக்கிறார். அதே நேரத்தில் ராணுவ தளபதி குமார் ஜாவீத் பஜ்வா போரை பற்றி பேசுகிறார். எனவே, பொறுத்தது போதும்; அமைதி பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இனி அவர்களுக்கு பாடம் கற்பிக்க ேவண்டிய நேரம் இது. எனவே, மத்திய அரசு இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக இந்திய அரசு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் தக்க பதிலடியும் தரவேண்டும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி