சென்னை: தணிக்கை நடைபெறாமல் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு பணியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து 7 மாவட்ட பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரபதிவுத்துறையில் சார்பதிவாளர் 7 பேர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் 2ம் நிலை இணை சார்பதிவாளர் பூபதி கோவை மாவட்ட பதிவாளர் (சீட்டு), திண்டுக்கல் 1ம் நிலை இணை சார்பதிவாளர் பிரகாஷ் ஈரோடு மாவட்ட பதிவாளர் (தணிக்கை), கே.சாத்தனூர் சார்பதிவாளர் டி.லிங்கேஸ்வரன் உறையூர் சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலை), வந்தவாசி சார்பதிவாளர் கல்பனா திண்டிவனம் மாவட்ட பதிவாளர் (தணிக்கை), திருப்பூர் இணை 1ம் நிலை சார்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்
சண்முகம் தர்மபுரி மாவட்ட பதிவாளர் (தணிக்கை), நகலூர் சார்பதிவாளர் மலர் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் (தணிக்கை), தர்மபுரி சார்பதிவாளர் (நிர்வாகம்) வளர்மதி தர்மபுரி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) நியமனம் செய்து அரசு செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை சார்பதிவாளர் அலுவலகங்களில் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால், மாவட்ட பதிவாளர்கள் இல்லாததால் சார்பதிவாளர்களின் தணிக்கை நடைபெறவில்லை. இதனால், சார்பதிவாளர்கள் நிலங்களை மதிப்பை குறைத்து இஷ்டப்படி பத்திரம் பதிவு செய்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரிலேயே உடனடியாக பதவி உயர்வின் பேரில் சார்பதிவாளர்கள் 7 பேரை உடனடியாக மாவட்ட பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி