உழவு தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்க உழவர் ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உழவுத் தொழிலாளர்களுக்கான முறையான ஊதிய உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய உழவர்கள்  ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள இந்திய ஊதிய அறிக்கையில் திறன் பயிற்சி பெற்ற உழவுத் தொழிலாளர்களுக்கான ஊதியம் 1993-94 முதல் 2011-12 வரையிலான 18 ஆண்டுகளில் 48 சதவீதம் மட்டும் தான் அதிகரித்திருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகள் கழித்து உழவு தொழிலாளர்களுக்கு ஊதியம் 177 மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது உழவுத் தொழிலாளர்கள் 18 ஆண்டுகளில் பெற்ற ஊதிய உயர்வு 57 மட்டும் தான். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். உழவுத் தொழிலாளர்களுக்கு எதிரான பொருளாதார துரோகமாகும்.

அதேநேரத்தில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதியம் இதே காலத்தில் 90 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உழவுத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகின்றனர் என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் உதாரணம். இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகின்றனர். இவை அனைத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட தீமைகளாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2004-05ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதுதான் உழவுத் தொழிலாளர்களின் வாழ்வை ஓரளவாவது வளப்படுத்தியுள்ளது. வேலை உறுதித் திட்டத்தால் உழவுத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு விகிதம் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

உழவுத் தொழிலாளர்களாக பணியாற்றுவோரில் 99 சதவீதம் பேர் நிலமற்ற ஏழைகள் ஆவர். அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உழவுத் தொழிலாளர்களுக்கு மட்டும்  எந்தவிதமான சமூக பாதுகாப்பும் கிடையாது.  அண்மையில், மத்திய அரசு அறிவித்த உழவர்களுக்கு ஆண்டுக்கு 6,000 வழங்கும் திட்டத்தின்படி  நிலம் வைத்துள்ள உழவர்கள் மட்டும் தான் பயனடைவர். உழவுத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. எனவே, உழவுத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியமும், முறையான ஊதிய உயர்வும் கிடைப்பதை உறுதி செய்ய உழவர்கள் ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: