கவுகாத்தி: தேசிய சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடுகளம் சரியில்லையென கூறி வீராங்கனை சாய்னா நெஹ்வால் விளையாட மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அசாம் மாநிலம், கவுகாத்தியில் தேசிய சீனியர் ேபட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கின. இதில் நடப்பு சாம்பியனான சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று காலை மகளிர் ஒற்றையர் போட்டியில் சாய்னா விளையாட வந்தபோது, ஆடுகளத்தை கண்டு கடும் அதிருப்தி தெரிவித்தார். ‘‘ஆடுகளம் விளையாடும் தரத்தில் இல்லை. மிகவும் மோசமாக உள்ளது. இங்கு என்னால் விளையாட முடியாது’’ என்று பேட்மின்டன் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் இவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. மேலும், அடுத்தாண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். எனவே, மோசமான ஆடுகளத்தில் விளையாடினால் மீண்டும் காயம் ஏற்படும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.