அறிவோம் ஆயிரம் !!

பித்தப்பை கற்களை தடுக்கும் சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கிறது. பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிகளவு காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்தஅழுத்தத்தை சீராக்குவதால் இதயநோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின்பி3) ரத்ததத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது.

அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோர்க்கு இரண்டாம்வகை அதாவது இனிசுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிகளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. உடல்பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும் போது உடல்எடை சீராகக்குறைகிறது. பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் பைட்டிக்அமிலம் ஆகியவை சிறுதானியங்களில் காணப்படுவதால் சிறுதானியங்களை உட்கொள்வோர்க்கு நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. அது போலவே பைட்டேட் புற்றுநோய் வராமல் காக்க உதவுகின்றது.

உடல் எடையை சமநிலையில் வைத்திருக்கும் தைராய்டு சுரப்பிகள்

நம் உடலின் எடையைச் சமநிலையில் வைத்திருக்க உதவுவது தைராய்டு சுரப்பியாகும். ஏனென்றால் தைராய்டு சுரப்பி மெட்டோபோலிச பணியில் பெரும்பங்கு வகிக்கிறது. தைராய்டில் சுரக்கும் தைராக்சின் எனப்படும் திரவம் பிராணவாயுவை கிரகித்து கரியமிலவாயுவை வெளியேற்றுவதற்கு துணைபுரிகின்றது. இந்த தைராக்சினில் பற்றாக்குறை ஏற்பட்டால் மனப்போராட்டம், வார்த்தை கோளாறு, உலர்ந்ததோல், உஷ்ணக்குறைவு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.ஆனால் தைராய்டு அதிகமாக சுரந்தால் இவற்றிற்கு எதிரிடையான கோளாறுகள் ஏற்படும். நோயாளிகளின் எடை குறையும். நரம்புத்தளர்ச்சி, சோர்வு ஆகியவை ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்து எல்லா வேலைகளையும் படபடப்புடன் செய்யும்படியாக இருக்கும். உடலின் கொழுப்புச்சத்துகள் வற்றி உடலின் எடை குறைந்து விடும்.

அளவுக்கதிகமான மெட்டோபோலிசம் எடையை குறைத்து விடுவது உண்மை என்றாலும், ஒல்லியாக இருக்கும் மனிதர்களுக்கு இது பொருந்துவதில்லை.இந்த தைராய்டுகளின் அளவுக்கதிகமான இயக்கத்தை டாக்டர் மூலம் சோதனை செய்தே கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தைராய்டுளை அதிகம் தூண்டாத உணவுப் பொருட்களை சாப்பிடலாம். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டால் உடலின் மெட்டோபாலிசம் பாதிக்கப்படும். அதாவது சக்தி உற்பத்தியாகி சேமித்து வைக்கப்படுவது குறையும். கவலை அதிகம் கொள்வதால் உடலிலுள்ள சக்தி திரவமாக மாறிவிடுகிறது. இந்நிலை ரத்தஓட்டத்தை பாதிப்பதுடன் ரசாயன சுரப்பிகளையும் பாதிக்கும்.

உணவு உண்ணும்போது கவலையுடன் உண்பதால் அவை ஜீரணிக்கப்படாமல் வீணாவதுடன் பல்வேறு கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சாப்பிடும்போது எல்லா கவலைகளையும் மறந்து அமைதியாக சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரத்தம் மூலம் உடல் வெப்பம் சீராகிறது

ரத்தம் உணவு, தண்ணீர், பிராணவாயுவை திசுக்களுக்கு எடுத்து செல்கிறது. கழிவுப்பொருட்களை கழிவு நீக்கும் உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது. நோய்க்கிருமிகளை எதிர்க்கிறது. சுரப்பிகள் சுரப்பு மற்றும் என்சைம்களை விநியோகிக்கிறது. உடல் முழுமைக்கும் ஒரேவிதமான வெப்பத்தை தருகிறது. எங்காவது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உறைவதின் மூலம் ரத்தஇழப்பை தடுக்கும். இவ்வாறு ரத்தம் பல்வேறு செயல்பாடுகளை செய்து உடலை காத்து வருகிறது.ஒருவர் நோயுற்றோ, விபத்திற்கு உள்ளாகியோ மிகுந்த ரத்தச்சேதம் ஏற்பட்டு விட்ட நிலையிலே மாற்று ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களிலே எல்லோருடைய ரத்தத்தையும் செலுத்தி விட முடியாது.

சம்பந்தப்பட்டவரின் ரத்தம் எந்த வகை என்பதை அறிந்தே அவருக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள அக்குளுடினோஜன் என்னும் பொருளை பொறுத்து ரத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.ஏ பிரிவு ரத்த நோயாளிக்கு ஏ மற்றும் ஓ பிரிவு ரத்த வகைகளை செலுத்தலாம்.பி பிரிவு ரத்தவகைக்கு பி மற்றும் ஓ பிரிவு ரத்தம் ஏற்று கொள்ளக்கூடியது. ஏபி பிரிவிற்கு எல்லா வகை ரத்தப்பிரிவையும் செலுத்தலாம்.ஓ பிரிவு ரத்த பிரிவினர்க்கு ஓ வகை ரத்தம் மட்டுமே சேரும். இதனால் ஓ பிரிவு ரத்தமுள்ளவர்களை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும் (யுனிவர்சல் டோனர்) என்றும், ஏபி பிரிவினர்க்கு அனைவரிடம் இருந்தும் பெற்று கொள்ளக்கூடிய ரத்தவகை உடையவர்கள் என்றும் கூறுவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: