×

செய்யாறு அருகே மாணவர்களுக்கு வண்டு, புழுவுடன் சத்துணவு விநியோகம் : அமைப்பாளர், சமையலருக்கு மெமோ

செய்யாறு: செய்யாறு அருகே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்டு, புழுவுடன் சத்துணவு விநியோகம் செய்த, சத்துணவு அமைப்பாளர், சமையலருக்கு பிடிஓ மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம் தென்னம்பட்டு கிராமம் காலனி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 30 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வண்டு, புழுவுடன் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது.

இதை கண்ட பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சத்துணவு அமைப்பாளர் பாஞ்சாலை, சமையலர் முத்தம்மாள் ஆகியோருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெற்றோர்கள் வெம்பாக்கம் வட்டாரவளர்ச்சி அலுவலர் பரணிதரனை சந்தித்து புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சத்துணவு அமைப்பாளர் பாஞ்சாலை, சமையலர் முத்தம்மாள் ஆகியோரை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டு மெமோ கொடுத்தார். மேலும், இனிமேல் மாணவர்களுக்கு சத்துணவை ஒழுங்காக பரிமாற வேண்டும் என்றும் அரிசி, பருப்பு காய்கறிகளை சுத்தமாக கழுவி சமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodar: Organizer ,cook , Ceyyaru, students, nutrition
× RELATED சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை