×

வெம்பக்கோட்டை அருகே சிதிலமடைந்து வரும் நூலக கட்டிடம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே ரூ.2.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம நூலக கட்டிடம் பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. கிராம நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புபட்டி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் அருகில் உள்ள  கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் கட்டி சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. இதன் பின்னர் நூலகம்  செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலக கட்டிடம் பயன்பாடின்றி சிதிலமடைந்து வருகிறது. நூலகம் பூட்டி கிடப்பதால் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். 15 கி.மீ.  தூரம் உள்ள சிவகாசி அல்லது ஆலங்குளம் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நூலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Library building ,Vembukottai , Vembakkottai, library building
× RELATED தமிழக அரசின் விருது பெற்ற கம்பம் கிளை...