×

கும்மிடிப்பூண்டியில் 3 வாலிபர்கள் வெட்டிக்கொலை.. கஞ்சா விற்கும் போட்டியில் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்

சென்னை: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள  மா.பொ.சி.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ்  மகன் ஆகாஷ் (18), அதே பகுதி திருக்குளம் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விமல் (21), சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரைச்சேர்ந்த சேகர் மகன் சதீஷ்  (26) ஆகியோர் கடந்த 19ம் தேதி இரவு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை 8 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும், அதே இடத்தில் இறந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனாதத் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில், 2018ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் நடந்த கொலை ஒன்றில் விமல் மற்றும் சதீஷிற்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடையலாம் என்ற கோணத்தில் நீதிமன்றங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நேற்று ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த 5 பேரை சிப்காட் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  விசாரணையில், புதுகும்மிடிப்பூண்டி காளத்தி தெரு நடராஜ்(24), கும்மிடிப்பூண்டி காட்டுக்  கொல்லை தெருவை சேர்ந்த நாகராஜ் (23), ஆத்துப்பாக்கம் பெருமாள் கோவில் தெரு  மாதவன் (23), சித்தராஜகண்டிகை வினோத்குமார்(25), புதுகும்மிடிப்பூண்டி  ரிஸ்க் பாஸ்கர் (26) என்றும், கும்மிடிப்பூண்டி, அதை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men , young men,killed,selling,cannabis,Gummidipoondi,Confessions,arrested
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!