சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர், மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தொகுதிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு மத்தியில் இருந்து முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வர உள்ளனர்.
வருகிற 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகிறார். தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரத்துக்காக பிப்ரவரி 10, 19ம் தேதியும் தமிழகம் வர உள்ளார்.
லயோலா கல்லூரியில் மிக மோசமாக பெண்களையும், பிரதமரையும், தமிழ் கலாச்சாரத்தையும், இந்து கலாச்சாரத்தையும் சித்தரிக்கும் வகையில் படங்களை வைத்து கண்காட்சி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை நடத்துவதற்கு யார் ஊக்கப்படுத்தினார்கள். இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்?. இந்து மத துவேசம் என்று எடுத்துக்கொண்டு பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள். தமிழத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
வருங்காலத்தில் எங்களுக்கும் இடம் கொடுங்கள். நாங்களும் கண்காட்சி வைக்கிறோம். கண்காட்சியில் மற்றவர்களை புண்படுத்தும்படி வைப்பதும், மற்றவர்களை கேவலப்படுத்தி வைப்பதும் எங்களுடைய நோக்கம் அல்ல. இந்து மத சின்னத்தையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். பெண்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். பார்த்தால் தெரியவில்லையா? என்ன வக்கிரபுத்தி. அதனால் நாங்கள் இனிமேல் சும்மா இருக்க மாட்டோம். மதசார்பின்மையாளர்கள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மதகலவரத்தை தூண்டுவதற்காகதான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது. இதேபோல கண்காட்சிகள் வருவதற்கு யார் காரணம்? என்பதை உணர்த்த வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி