சிவகாசி: கொடநாடு விவகாரத்தில் தன்னை குற்றவாளி அல்ல என நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருப்பிலும் குதிப்பார்; கடல் நீரிலும் இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. சாத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர், தன்னுடைய அறையில் யாகம் நடத்தவில்லை.
சாமிதான் கும்பிட்டார். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருப்பில் குதிப்பார். கடல் நீரிலும் இறங்குவார். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு எந்த பயமும் இல்லை. தேர்தல் களத்தில் இருக்கப்போவது அதிமுக, திமுகதான். மற்ற கட்சிகள் எதுவும் தேர்தல் களத்திலேயே இல்லை. பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் நிறையும் உண்டு. குறையும் உண்டு. அதிமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி