கிருஷ்ணகிரி: தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டினார்.
அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: டாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திப்பதற்காக அதிமுக தயாராக உள்ளது. தற்போது வரையில் அதிமுகவுக்கு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. ஜெயலலிதா, 2009, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்றார். மத்திய அரசுடன் மாநில அரசு என்ற முறையில் நாங்கள் நட்புணர்வுடன் இருந்தோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாகவும் இருவரும் இணக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்கள் கட்சியின் செயற்குழு கூடி, கூட்டணி வேண்டுமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர்தான் முடிவு எடுப்பார்கள். தமிழக அரசுக்கு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதன்படி, 9 ஆயிரத்து 500 கோடி வரையில் தமிழகத்திற்கு வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதைத் தவிர கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 15 ஆயிரம் கோடி கேட்டோம். இதற்காக பிரதமர் மோடியை முதல்வர், துணை முதல்வர், நான் உள்ளிட்டோர் சந்தித்தோம். அதை வழங்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மேகதாது விவகாரத்தில் குரல் எழுப்பிய அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்டு செய்தார்கள். அதை நீக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி