குழந்தை வரம் பெறுவதற்காக சிறப்பு பூஜையில் பங்கேற்ற கணவனை கல்லால் தாக்கி மனைவி நகை பறிப்பு

காஞ்சிபுரம்: குழந்தை பாக்கியம் பெறவேண்டி நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட கணவனை தாக்கி அவரது மனைவியின் நகைகளை பறித்து போலி சாமியார் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புதூர் கிராமத்தை  சேர்ந்தவர்  பிரபாகரன் (35). இவர் பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (30). கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமரைதாங்கல் பகுதியை சேர்ந்த சாமியார் பாபு (42) சந்தித்துள்ளனர். அப்போது சாமியார், ‘’பவுர்ணமி அன்று இரவு பூஜை செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பூஜைக்கு தம்பதியினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி நேற்று நள்ளிரவு  பவுர்ணமி அன்று சாமியார் பாபு நடத்திய சிறப்பு பூஜையில் தம்பதி பிரபாகரன், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். சாமியார் கேட்டுக்கொண்டதின்படி ஜானகி தனது செயின், கம்மல் ஆகியவற்றை கழற்றி பூஜையில் வைத்துள்ளார். சாமியார் பயபக்தியுடன் மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்க தம்பதி, கண்களை மூடி சாமியார் சொன்ன மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாபு, அங்கிருந்த பெரிய  கல்லை எடுத்து பிரபாகரனின் முகத்தில் சரமாரி தாக்கியுள்ளார். மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் பிரபாகரன் மயங்கி விழுந்ததால்  அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டுள்ளார்.  அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்  வந்ததால் சாமியார், பூஜையில் வைத்திருந்த ஜானகியின் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதன்பிறகு ஜானகி நடந்த விஷயங்களை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சாமியார் வீட்டின் முன் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு மயங்கிக் கிடந்த பிரபாகரனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக  சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியமும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், போலி சாமியார் பாபுவை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: