லக்னோ: உத்தரபிரதேசத்தில் 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ கூட்டணி 325 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராகவும், பாஜ கட்சியின் 4வது முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், அவர்களின் வருமானம், அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென தனது முதல் அதிரடி உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மாநில அரசின் முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இதனை வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாநிலம் முழுவதும் உள்ள சாதுக்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்துக்கொள்ள ஜனவரி 30 வரையில் மாநில அரசின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடக்கும் எனவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி