பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளா மூலம் ₹1.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற இடத்தில், உலக புகழ்பெற்ற கும்பமேளா கடந்த 15ம் தேதி தொடங்கியது. மார்ச் 4ம் தேதி வரை மொத்தம் 50 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இந்த விழா ஏற்பாடுகளுக்காக உத்தரப் பிரதேச அரசு ₹4,200 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த விழா ஆன்மீக விழா என்றாலும், இதனுடன் ஏராளமான வர்த்தகமும் நடக்கிறது. பல துறைகளில் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் இந்த விழா மூலம் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கிறது. ஓட்டல்கள், உணவு விற்பனை தொழிலில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சுற்றுலா ஆபரேட்டர்கள் 45 ஆயிரம் பேருக்கும், விமான நிலையங்கள், விமான நிறுவனங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், சுற்றுச்சூழல் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மூலம் 85 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என சிஐஐ கூறியுள்ளது.