ஜெயலலிதாவே ஏற்படுத்தவில்லை பாஜவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி கிடையாது: தம்பிதுரை பேட்டி

கும்பகோணம்: பாஜவுடன் கூட்டணியை ஜெயலலிதாவே ஏற்படுத்தவில்லை, எனவே பாஜவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறினார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: கோயிலில் வழிபடுவதற்கும், அரசியல் கட்சி தொடங்குவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கோயிலுக்கு வந்துதான் தனிக்கட்சி தொடங்க வேண்டுமா, இல்லாவிட்டால் தொடங்க  முடியாதா? ஆனால்,  தனிக்கட்சி தொடங்குவதற்கு எனக்கு தகுதி இல்லை. ‘பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கூட்டணி கிடையாது. கூட்டணியில் இருந்தால்தான் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதாவே பாஜவுடன் கூட்டணி ஏற்படுத்தவில்லை. பாஜகவிற்கும்,  அதிமுகவிற்கும் நட்பு இருக்கின்றது. மோடி என்னுடைய நண்பர். ஆனால், அரசியல் உடன்பாடு என்பது வேறு. பாஜக எங்களுடைய கூட்டணியில் கிடையாது. நான் இதுவரையிலும்  தமிழகத்தின் உரிமைகளை பற்றித்தான் பேசி வருகிறேன். அந்த உரிமைகளுக்கு மத்திய அரசு பலன் கொடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம். எச்.ராஜா, அதிமுக உள்கட்சி  உரிமைகளை பற்றி பேசக்கூடாது, அவர் பேசுவது தவறு, சரியல்ல. பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என்றார். தமிழிசை திராவிட கட்சியை வர விடமாட்டோம் என்கிறார். இது  அவர்களுடைய கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

2வது நாளாக கோயில்களில் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, குடும்பத்துடன் கடந்த 18ம் தேதி இரவு கும்பகோணத்திற்கு வந்து தங்கி விட்டு நேற்று முன்தினம் பல்வேறு கோயில்களில் சிறப்பு யாகம், பூஜை,  வழிபாடுகளை செய்துவிட்டு, கும்பகோணத்தில் தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு திருவிடைமருதுார் மகாலிங்கசாமி கோயிலில், பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்து, 7  விளக்கேற்றினார். தொடர்ந்து தைப்பூசத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தம்பிதுரையை  ரகசியமாக சந்தித்து, சால்வை அணிவித்து சென்றார். கோயில் வாயிலில் அமர்ந்திருந்த யாசகம் பெறுபவர்களுக்கு ₹10 வழங்கிய தம்பிதுரை தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில்  அதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பின்னர் நாகை மாவட்டம், திருப்புகலூரிலுள்ள அக்னீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கும்பகோணத்திற்கு வந்து, சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு, தஞ்சை வழியாக  திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றார். இதனிடையில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு வந்த அமைச்சர் துரைக்கண்ணு, தம்பிதுரையை பார்க்காமல்  சென்றுவிட்டார். உளவுப்பிரிவு போலீசார், தம்பிதுரை செல்லும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேரோட்டத்தின் போது, தம்பிதுரையுடன் யார், யார் கலந்து கொள்கிறார்கள்  என்பதை ரகசியமாக போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: