வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, மேலும் தீபாவளி, பொங்கல் போனசும் தரப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பிடிஓ அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ₹6 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரையும், அதிகாரிகளுக்கு ₹15 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரையும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு மேல்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 4 மாதங்களுக்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.