நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் காலகட்டத்தை நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? என்ன நடக்கப்போகிறது... யாருக்கு அந்த உயரிய நாற்காலி என்றெல்லாம் ஒரு கணிப்பு எழுந்து மக்கள் மனதில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்ற நேரம், சூழல் இப்போது வந்து விட்டது. இதோ மார்ச் மாதம் துவக்கத்தில் அறிவிப்பு வெளியாகி விடும். அதன் பின் தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கிவிடும். ஒவ்வொரு தேர்தலும், அது சட்டசபை தேர்தலாகட்டும், மக்களவை தேர்தலாகட்டும், ஏன் உள்ளாட்சி தேர்தலாகட்டும் மக்கள் கட்சிகளின் மீதான அபிமானத்தை கடந்து, தங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வைத்து தான் புதிய அரசு எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிப்பர். மக்களின் எண்ணங்களை அவ்வளவு சுலபமாக கணித்துவிட முடியாது. 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ‘மிஷன் 272’ என்று சொல்லிதான் தேர்தல் களத்தில் இறங்கியது பாரதிய ஜனதா. 282 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது.