பொதுத் தேர்வு நெருங்குவதால் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஜாக்டோ-ஜியோவிற்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: பொதுத் தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்  விடுத்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய 50 பேர் மற்றும் 2  ஆசிரியர்கள்  சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு கல்விப் பயணம் செல்கின்றனர். இதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. கல்விப் பயணம் மேற்கொள்ள உள்ள மாணவர்களை பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து, பயணச் சீட்டு மற்றும்  புத்தகங்களை வழங்கினார். இந்த மாணவர்கள் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகின்றனர். அவர்களுடன் மதுரை மாவட்டம் வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்  சார்லஸ் இம்மானுவேல், திருப்பூர் தெய்வாம்மாள் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியை கலைவாணி ஆகியோர் செல்கின்றனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

தமிழக பள்ளிக் கல்வித்துறை, பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில்  செயல்படும் அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 125 மாணவர்கள் தேர்வு  செய்யப்பட்டு அவர்களில் 50  பேர் மட்டும் சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு கல்விப்பயணம் செல்கின்றனர். 21ம் தேதி செல்லும் மாணவர்கள் 30ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர். இந்த  கல்விப் பயணத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள்.

வரும், மே மாதம் 25 மாணவர்கள் கனடாவுக்கும், மலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்களும் அனுப்ப உள்ளோம். ஆண்டுதோறும் இது போன்ற கல்விப் பயணத்தில் மாணவர்கள்  பங்கேற்பார்கள். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். இது தொடக்கம்தான், ஜூன் மாதம் முழுவீச்சில் இந்த வகுப்புகள்  செயல்படும். இந்த வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சிறப்பாக ஆங்கிலம் கற்பிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். தற்போது பொதுத் தேர்வு நெருங்குவதால்  ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஆசிரியர்கள் நிலை என்ன என்பது பிறகுதான் தெரியும்.ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிப்ரவரி மாதம் பணி முடியும். கம்ப்யூட்டர் லேப் பணிகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் முடியும். கல்வித் தொலைக்காட்சி  தொடங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிறுவப்படுகிறது. விரைவில் முதல்வர் திறந்த வைப்பார், என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: