சென்னை: “யாருக்கும் கூஜாவோ, துதி பாடுவதோ எங்கள் அகராதியிலேயே கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: வீணான வதந்தி பரவியிருக்கிறது. வேண்டுமென்றே யாரோ கிளப்பி விட்டு இருக்கிறார்கள். அவர் (ஓ.பி.எஸ்.) யாகம் நடத்தியதை யார் பார்த்தது?. ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?. எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இதுபோன்ற வதந்திகளுக்கு எப்படி நான் கருத்து தெரிவிக்க முடியும். அதிமுகவுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும், ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் செய்கின்ற சதி தான் இது. அதிமுக ஆட்சி இன்றைக்கு கலைந்து விடும், நாளை கலைந்து விடும் என்று சொல்லி சொல்லி அவர்கள் வாய் தான் ஓய்ந்து போய் இருக்கிறது.
தம்பிதுரை ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வருகிறார். கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அதிமுக தனித்தன்மை படைத்த கட்சி என்பது அவருக்கு தெரியும். எந்த நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை அதிமுக விட்டுக்கொடுக்காது. இது அவருக்கும் தெரியும்.