சென்னை : சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6 மணியில் இருந்து 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் இதேபோல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டு உள்ளன. விமான நிலையத்துக்குள் வரும் அனைவரும் வாகனங்களையும் நுழைவு வாயிலிலேயே நிறுத்தி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர்.அதோடு, விமானநிலைய கார் பார்க்கிங், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, பயணிகள் பாதுகாப்பு சோதனை நடைபெறும் இடங்கள் ஆகியஇடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.சென்னை விமானநிலையத்தில் ஏற்கெனவே இருக்கும் ரகசிய கண்காணிப்பு கேமரா குழுவினருடன் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகின்றன. உள்நாடு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு கூடுதலாக 2 கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.
எனவே, உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.