சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவை தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் அட்டவணை தயாரித்தல் மற்றும் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பிரதான கட்சியான பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க ஆரம்பித்துள்ளது. அதே போல மாநில கட்சிகளும் தேர்தல் கூட்டணி வேலையை ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. விரைவில் அவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.