பெரம்பூர்: சென்னை ஓட்டேரி, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் குமரன் (22) ரவுடி. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சஞ்சனா என்ற குழந்தை உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் பாரதி இறந்தார்.சமீபத்தில் கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில், தொடர்புடைய குமரனை டிபி.சத்திரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கே.எம்.கார்டன் இரண்டாவது தெரு வழியாக குமரன் நடந்து சென்றார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், அவரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.தகவலறிந்து புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குமரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.