அந்தியூர்: அந்தியூர் அருகே மனைவி, குழந்தை முன்பு ஒர்க்ஷாப் ஓனர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் ஒர்க்ஷாப் ஓனரின் மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர். முறை தவறிய காதலால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் கைலாசம் (40). இவர் அந்தியூர் அருகே தவிட்டு பாளையத்தில் கடந்த நான்கு மாதங்களாக டிங்கரிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. ஹேமலதா(22)என்ற மனைவியும் சிவவர்ஷினி என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர். இவர் புன்னம் பகுதியில் உள்ள தனது மாமனார் கண்ணன் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஏழு மணிஅளவில் ஒர்க் ஷாப்பை மூடி விட்டு தனது மனைவி குழந்தையுடன், மாமனார் வீட்டிற்கு அந்தியூரில் இருந்து பைக்கில் கைலாசம் சென்று கொண்டிருந்தார். பவானி ரோட்டில், கணபதி கரட்டூர் என்ற இடத்தில் சென்ற போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஒரு நபர் திடீரென இவருடைய கழுத்தில் கத்தியால் குத்தி கைலாசத்தின் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினார்.