சென்னை: சுகாதாரமில்லாமல் இயக்கப்படும் ரயில்கள் குறித்து பயணிகளிடம் நடத்திய சர்வேயில் துரந்தோ ரயிலுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. சுகாதாரமான ரயிலில் சகாப்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சுகாதாரமாக மக்கள் பயணம் செய்ய, தூய்மையாக உள்ள 2018ம் ஆண்டுக்கான ரயில் சர்வே பிரிமியம், நான் பிரிமியம் என 210 ரயில்களில் நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக ரயிலில் உள்ள கழிவறைகள், இருக்கைகளின் சுத்தம், பெட்களின் பராமரிப்பு குறித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளிடம் பல்வேறு கேள்விகளின் மூலம் நேரடியாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. ரயில்வேத்துறையில் இந்த சர்வே முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. கழிவறைகளின் தூய்மை, தூய்மை செய்பவர்களின் பணிகள், பெட் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது, குப்பைத்தொட்டிகள் சரியாக வைக்கப்படுகிறதா என்ற கேள்விகளை கொண்ட படிவத்திற்கு பயணிகள் மதிப்பெண் வழங்கும் வகையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில், 1000 மதிப்பெண்ணிற்கு புனே முதல் செகந்திராபாத் வரை செல்லும் சகாப்தி ரயிலுக்கு 916, ஹவுரா-ராஞ்சி சகாப்தி ரயிலுக்கு 914, சென்னை சென்ட்ரல்- மைசூர் சகாப்தி ரயிலுக்கு 906 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதல் 3 இடத்தை பிடித்துள்ளது.