ஓட்டப் பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணிக்கு வேலை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு 2018 அக்டோபரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணியான தேவிகா, ஓட்ட பந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்ததாக கூறி, அடுத்த கட்டத்துக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதை எதிர்த்து தேவிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி விமலா முன் விசாரணைக்கு வந்தபோது,  8 வார கருவுற்றிருந்த நிலையில் ஓட்ட பந்தயத்தில் தாமதமாக வந்ததால், பணி வழங்கி, பிரசவத்துக்கு பின், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

பெண் போலீசாருக்கு பதவி உயர்வு தேர்வு தொடர்பாக போலீஸ் கமிஷனர் கடந்த 2003-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், கர்ப்பிணி பெண் போலீசார், அதுதொடர்பான மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்து, பிரசவத்துக்கு பின்னர் அவர்களுக்கு தனியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரரை இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், பிரசவத்துக்குப் பின், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை அவருக்கு தனியாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: