சென்னை: மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நில அபகரிப்பு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூரை சேர்ந்த சி.நாகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 41 வருடங்களாக விவசாயம் செய்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 2015 ஏப்ரல் மாதம் கிஷன்லால் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தார். இதையடுத்து, திருவள்ளுர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தேன். அவரது அறிவுறுத்தலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் கிஷன்லால் உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.