தேசிய சீனியர் ஹாக்கி பைனலில் இன்று மத்திய செயலகம்-தமிழகம் மோதல்

சென்னை: தேசிய சீனியர் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் தமிழகம் - மத்திய செயலகம் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் தமிழ்நாடு - சாய் அணிகள் மோதின. 9வது நிமிடத்தில் சாய் வீரர் பாபி சிங் முதல் கோல் அடிக்க, 13வது நிமிடத்தில் தமிழக வீரர் சண்முகம்  கோல் போட்டு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழக வீரர் வினோதன், சாய் வீரர் மோகித் குமார் அடுத்தடுத்து கோல் அடிக்க, இடைவேளையின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் தமிழக வீரர் ராயர்  பீல்டு கோல் போட்டு அசத்த 3-2 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடமே சாய் வீரர் ராகுல் குமார் கோல் அடிக்க மீண்டும் 3-3 என சமநிலை ஏற்பட்டது.

ஆட்டம் 3-3 என்ற கோல்கணக்கில் டிரா ஆனதை தொடர்ந்து பெனால்டி ஷூட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர்கள் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் சார்பில் விஷால், லோகேஷ் போரா கோல் அடிக்க, மற்ற வீரர்கள் வாய்ப்பை வீணடித்தனர். தமிழகம் 6-5 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மாலை நடந்த 2வது அரை இறுதியில்  பெங்களூரு - மத்திய செயலகம் (சென்ட்ரல் செகரடேரியட்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் மத்திய செயலகம் 4-3 என வென்றது (மொத்தம் 7-6). இன்று பிற்பகல் 3 மணிக்கு ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில்  தமிழ்நாடு  - மத்திய செயலகம் மோதுகின்றன. காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள 3, 4வது இடங்களுக்கான போட்டியில்  சாய் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: