கோத்தகிரி அருகே பரபரப்பு சம்பவம்: மதுபோதையில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்

ஊட்டி: கோத்தகிரியில் பெண் குழந்தையை தாயே போதையில் கிணற்றில் வீசி கொன்றார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா(32). இவர்களுக்கு சுபாஷினி(14), ஸ்ரீஹர்ஷினி(4). என்ற குழந்தைகள் இருந்தனர். சஜிதாவின் கணவர் பிரபாகரன் கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மூத்த மகள் சுபாஷினி 10ம் வகுப்பு படித்து வருகிறார். சஜிதா அருகில் உள்ள தனியார் காட்டேஜில் வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு இளைய மகள் ஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் குழந்தையை தேடிவந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் 8 அடி உயரம் உள்ள தரைமட்ட கிணற்றில் பொம்மையுடன் குழந்தை உடல் ஒன்று மிதப்பதை கண்ட இப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர், அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சஜிதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் சஜிதா தனது குழந்தையை தானே கிணற்றில் வீசி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவர் உயிரிழந்த பின் எங்களது குடும்பத்தை நடத்த சிரமமாக இருந்தது. மேலும், எனக்கு மது பழக்கம் இருந்ததால் நான் காட்டேஜில் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. குழந்தைகளை வளர்க்க சிரமமாக இருந்தது. எனவே, மகளை கொல்ல முடிவு செய்தேன். இரவு மது போதையில் இருந்த நான், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கிணற்றில் போட்டு கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரை கைது செய்த  போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: