போகோடா: கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள். கொலம்பியாவின் தலைநகராக போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. நேற்று காலை உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த மையத்திற்குள் மர்ம கார் ஒன்று வேகமாக நுழைந்தது. பின்னர், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கிருந்த பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 68 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காரில் 80 கிலோ எடை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்றும், காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, கார் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களிலேயே இதுதான் மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.