2வது திருமணத்துக்கு மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு வாலிபர் தற்கொலை

குலசேகரம்,: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு பறையன்கோணத்துவிளை பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (36). வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்த இவரது கணவர் மணிகண்டன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.  இதனால் கிரிஜா தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். கிரிஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் (30) என்பவர் உதவியாக இருந்து வந்தார். இதை பயன்படுத்தி கிரிஜாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் கூறியபோது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஜான்ரோஸ் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிரிஜா தனக்கு 2 பெண் குழந்தைகள் நலனுக்காக திருமணம் செய்யப்போவதில்லை எனக்கூறி ஜான்ரோசை ஒதுக்கியுள்ளார். என்றாலும் ஜான்ரோஸ் அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். அவரை பார்க்கும்போதெல்லாம் திருமணம் செய்யும் எண்ணத்தை கூறி வந்தார். இதனை அவர் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன்படி, தனது விருப்பத்தை ஏற்காத கிரிஜாவை பழிதீர்க்க முடிவு செய்து ஆசிட் வீச திட்டமிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கிரிஜாவிடம் சென்று தன்னை திருமணம் செய்ய கூறியுள்ளார். கிரிஜா அவரை திட்டி வெளியே விரட்டியுள்ளார். அந்தநேரத்தில், ஜான்ரோஸ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கிரிஜா மீது வீசினார். இதனால், வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிைடயே போலீசுக்கு பயந்து விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: