ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறங்கினார். மேலும் ராயுடுவுக்கு பதில் கேதார் ஜாதவ், குல்திப் யாதவுக்கு பதில் சாஹல் களமிறங்கினர்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில் பிஞ்ச் 14 ரன்களிலும், அலெக்ஸ் ஹேரி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கவாஜா - மார்ஷ் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. கவாஜா 34 ரன்களிலும், மார்ஷ் 39 ரன்களிலும் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார்.

இந்த அதிரடி சற்றுநேரம் தாக்குப்பிடித்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் புவனேஸ்வர் குமாரின் அபார கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து வந்த ஹேன்ட்ஸ்ஹோம்ப் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 48,4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய சாஹல் 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ரோகித் சர்மா 9 ரன்களில் சிடில் பந்து வீச்சிலும், தவான் 23 ரன்களில் ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் கேப்டன் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 54 ரன்கள் சேர்த்த போது கேப்டன் கோலி 46 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டோனியுடன் ஜோடி சேர்ந்த கேதார் ஜாதவ் ஜோடி ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 49.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் டோனி 87 ரன்களும், கேதார் ஜாதவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: