குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு; 24-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டிடிவி தினகரன் தரப்பு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 24-ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற டிடிவி.தினகரன், இனிமேல் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்துவதற்காக இந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக ஒதுக்கும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நாளை (இன்று) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில் எங்களுக்கு நிரந்தரமாக  குக்கர் சின்னத்தை ஒதுக்க வலியுறுத்தி வருகிறோம் என வாதிட்டார்.

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குக்கர் சின்னம் தான் வேண்டும் என்றால், தேர்தல் தேதி அறிவித்த பிறகு அவர்கள் போட்டியிடும் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தான் சென்று முறையிட வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தேவையற்றது என அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தையே எதிர்வரும் அனைத்து தேர்தலுக்கும் ஒதுக்கீடு செய்ய முடியுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம்  நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜனவரி 24-ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: