புதுடெல்லி: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன், இபிஎஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று காரசார வாதம் செய்தன. இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான மதுசூதனன் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் டிடிவி.தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செம்மலை மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது.நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி, சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் முன்னிலையில் டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “குக்கர் சின்னத்தை தங்களுககு ஒதுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி,தினகரன் தொடர்ந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.