கள்ளக்காதலனின் சொத்தை அபகரிக்க அடியாட்களுடன் முகாமிட்ட கல்லூரி பெண் நிர்வாகி

* பர்கூர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பால் தப்பி ஓட்டம்

* தமிழக உயர் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு?

அந்தியூர்; கள்ளக்காதலனின் சொத்தை அபகரிக்க  பர்கூர் மலையில் அடியாட்களுடன்  முகாமிட்ட காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான கல்லூரியின் பெண் நிர்வாகி,  மலைவாழ் மக்களின் மறியல் போராட்டத்தால் காரில்  தப்பிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. பெண் நிர்வாகியின் பின்னணியில் தமிழக உயர் போலீஸ்  அதிகாரி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் ஊசிமலையை சேர்ந்தவர் கதிரவன்(50). சென்னையில் சினிமா நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு  சொந்தமாக பர்கூர் மலையில் 20 ஏக்கர்  நிலம் உள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவுரிகாமாட்சி என்ற பெண்ணுடன் கதிரவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கவுரிகாமாட்சி காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான  டிரஸ்டின்கீழ் கேரளாவில் உள்ள எஸ்.யு.டி.அகாடமி ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி நிர்வாகியாக உள்ளார். கதிரவனும் கவுரிகாமாட்சியும் திருமணம் செய்யாமல் கடந்த 7 ஆண்டாக ஊசிமலையில் உள்ள கதிரவன் வீட்டில்  வாழ்ந்துள்ளனர்.  திடீரென ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் இடையில் பிரிந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, கதிரவனை மிரட்டி பர்கூரில் உள்ள சுமார், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 ஏக்கர் நிலத்தையும் ஆடம்பர  வீட்டையும் அபகரிக்க கவுரிகாமாட்சி முயன்றுள்ளார்.

இதற்கிடையில், கவுரிகாமாட்சிக்கு தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக கதிரவன் சொத்துக்களை அபகரிக்க  உதவியை நாடியுள்ளார். அந்த காவல்துறை உயர்  அதிகாரி அளித்த வாய்மொழி உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கதிரவன் ஒருவருக்கு துப்பாக்கி விற்பனை செய்துள்ளதாக அவர் மீது புகார் பெற்று வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கதிரவன்  நீதிமன்றத்தில் சென்று முன்ஜாமீன் பெற்றுவந்த நிலையில், கவுரிகாமாட்சி கடந்த 3 நாட்களுக்கு முன் கதிரவனின் வீட்டுக்கு 50க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்தார். இதனை கண்ட கதிரவன் உயிருக்கு பயந்து தலைமறைவானார். ஆனால், கதிரவனின் வீட்டு கதவை கவுரிகாமாட்சி அடியாட்களுடன் உடைத்து அங்கேயே குடியேறினார். கதிரவனின் உறவினர்களான ஊசிமலையை சேர்ந்த  வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றும் கார்த்திக் மற்றும் முருகேசன் ஆகியோரை காவல்துறையினர் கடந்த 7 நாட்களாக விசாரணை என்ற  பெயரில் அழைத்து சென்று கதிரவன்  இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமை படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் ஊசிமலை கிராமமக்கள், கதிரவனின் வீட்டை நேற்றுமுன்தினம் முற்றுகையிட்டனர். இதையறிந்த பர்கூர் காவல்துறையினர் அவசர அவசரமாக சென்று கவுரிகாமாட்சி, அவரது  அடியாட்களை வீட்டை விட்டு வெளியே போகும்படி தகவல் தெரிவித்தனர். இதன்பின்பு 3 சொகுசு காரில் கவுரிகாமாட்சி தனது அடியாட்களுடன் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டபடி தப்பியோடி விட்டார். கிராமமக்கள்  மறியல் செய்துள்ள நிலையில், நேற்று கார்த்தி, முருகேசனை பர்கூர் போலீசாரால் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: