சேலம்: தமிழகத்தில் புதிதாக 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேசினார். அண்ணா பூங்காவில் ₹80 லட்சத்தில் கட்டப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் மணிமண்டபத்தையும், உருவச்சிலைகளையும் திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எத்தனை தடைகள் வந்தாலும், இடைஞ்சல்கள் செய்தாலும், எங்கள் மீது எத்தனை பழிகளை சுமத்தினாலும், இந்த அரசு தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும். எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் அமைந்துள்ள ஓமலூர் சாலைக்கு ‘பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் சாலை’ என்று பெயர் சூட்டப்படும். மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.