சென்னை: கொடநாடு விவகாரத்தில் அதிமுகவினர் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.கொடநாட்டில் நடைபெற்ற தொடர் கொலையில் முதல்வர் எடப்பாடியை தொடர்புபடுத்தி கடந்த 3 நாட்களுக்கு முன் டெல்லியில் தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் குற்றம்சாட்டி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். இதுபற்றி ஒரு ஆவணப்படத்தையும் வெளியிட்டார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இந்த பிரச்னை குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை புகார் அளித்தார்.இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் எம்பிக்கள் வைத்திலிங்கம், வேணுகோபால், ஜெயவர்தன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தமிழக கவர்னரை நேற்று முன்தினம் (செவ்வாய்) சந்தித்து மனு கொடுத்தனர்.