சென்னை: கொடநாடு பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதுவிலக்கை நாம் ஒரே நாளில் அமல்படுத்தி விட முடியும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை யோசித்து பார்க்க வேண்டும். அதனால் தான் மதுவின் தாக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க படிப்படியாக மது விலக்கு அமல்படுத்துவோம் என்று தெரிவித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பூரண மதுவிலக்கு தான் அரசின் கொள்கை. உடனடியாக செய்தால் கள்ளச்சாராயம் பெருகும். கொடநாடு பிரச்னையை மூடி மறைக்க வேண்டியதில்லை. கோர்ட்டில் இருக்கும் விஷயத்தை பற்றி எப்படி கூற முடியும். சயான் யாருடைய அறிக்கையை வைத்து சொல்கிறார், இறந்து போன கனகராஜ் சொன்னதாக சயான் கூறுகிறார். இறந்த கனகராஜ் உயிரோடு வந்து சாட்சி சொல்ல முடியுமா? அது முடியாத காரியம். அதனால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டு புனையப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எப்போதும் எடுபட்டதாக வரலாறு இல்லை. மடியில் கனம் இல்லை என்பதால் தான் சட்ட ரீதியாக சந்திக்கிறோம். யார் வீடியோவை வெளியிட்டார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி