சென்னை: பொங்கல் மற்றும் போகி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல் ரூ.85 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த விற்பனையானது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகரிக்கும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது 4 நாட்கள் விடுமுறையில் ரூ.602 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. அதன்படி, போகி பண்டிகையின் போது ரூ.148 கோடிக்கும், பொங்கல் அன்று ரூ.155 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தமாக ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.