வறுமையால் பாலிதீன் கவரால் முகத்தை மூடி பார்வையற்ற மகன் கொலை சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தாய் மகன் பிரிவு வாட்டியதால் தற்கொலை: சென்னையில் சோக சம்பவம்

சென்னை: வறுமையின் கொடுமையால் பார்வையற்ற மகனை வளர்க்க முடியாமல் அவனை பாலிதீன் கவரால் முகத்தை மூடி கொலை செய்து சிறை சென்ற தாய், ஜாமீனில் வந்ததும் மகன் பிரிவு வாட்டியதால் விரக்தி  அடைந்து தானும் தற்கொலை செய்துகொண்டார். சென்னை பரங்கிமலை நசரத்புரம்  பகுதியை சேர்ந்தவர் பத்மா (35). இவரது  கணவர் கோபிநாத் (37). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.  இதையடுத்து, தி.நகரில் உள்ள ஒரு  துணிக்கடையில் பத்மா வேலை பார்த்தபடியே பரத் (13) என்ற  பார்வையற்ற மகனுடன் வாழ்த்து வந்தார். கஷ்டப்பட்டு மகனை அடையாறில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.இந்நிலையில் குறைந்த சம்பளத்தால் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும்  கஷ்டப்பட்டு வந்த  பத்மா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம்தேதி மகனுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அன்று வீட்டின்  வெளியே  விளையாடிக்கொண்டிருந்த மகன் பரத்தை அன்போடு அழைத்து அவன்  வீட்டுக்குள் வந்ததும் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து அழுதபடி,  தான் தயாராக வைத்திருந்த பாலிதீன் கவரால் முகத்தை மூடி அழுத்தி  கொலை செய்தார்.  பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால், தூக்கு கயிறு அறுந்ததால்  கீழே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மா உடனே மகன் முகத்தை மூடியிருந்த  பாலிதீன் கவரை எடுத்து விட்டு பரத்தின் உடலை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு  அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு தனது மகன் மயங்கி விழுந்து விட்டதாக கூறி சிகிச்சை அளிக்குமாறு  டாக்டர்களிடம் மன்றாடியுள்ளார்.    ஆனால், பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மேலும் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி பரங்கிமலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் வந்து பரத்தின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், பத்மாவை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது  வறுமையின் காரணமாக மகனை பாலிதீன் கவரால் முகத்தை மூடி அழுத்தி கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும்  கூறினார். இதையடுத்து போலீசார் பத்மாவை கைது செய்து  சிறையில் அடைத்தனர். பின்னர் ஒரு மாதத்திற்கு முன் ஜாமீனில் வெளிவந்த பத்மா யாரிடமும் பேசாமல் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில்  வெறுப்படைந்த பத்மா  மகன் ஏக்கத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, பத்மாவின் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: