புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 உறுப்பினர்கள் அடங்கிய கொலிஜியம் கடந்த 11ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார். இவர்களில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜூனியர் என்பதால், அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜூனியர் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறியுள்ளார்.