அலிபுர்துர்: மேற்கு வங்கத்தில் வீடு புகுந்த சிறுத்தை, தாயின் மடியில் இருந்த 3 வயது சிறுமியை பறித்து சென்று கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், அலிபுர்துர் மாவட்டத்தில் மதரிஹாத் பகுதியில் கர்கண்டா தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இரை தேடி ்அது அலைந்தது. அப்போது, பூஜா ஓரான் என்ற பெண் தனது வீட்டில் 3 வயது மகளை மடியில் வைத்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டுக்குள் பாய்ந்த சிறுத்தை, பூஜாவின் மடியில் இருந்த குழந்தை பிரனிதாவை தூக்கிக் கொண்டு ஓடியது. அதை தடுக்க பூஜா தீவிரமாக போராடினார். ஆனாலும், அது பெரிய சிறுத்தையாக இருந்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை, குழந்தையுடன் மறைந்தது. பூஜாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்து, இரவு முழுவதும் சிறத்தையை தேடியும் கிடைக்கவில்லை.