இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தம் படுதோல்வி - பிரதமர் தெரசா மே அரசுக்கு சிக்கல்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரக்சிட் ஒப்பந்ததத்துக்கு எம்பி.க்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் படுதோல்வியை சந்தித்தது. இது ஆளும் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. இதில், பெரும்பாலான பொதுமக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்தனர். இதன்படி, வரும் மார்ச் 29ம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேற வேண்டும். இதுதொடர்பாக, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தி பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வந்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தால் இங்கிலாந்து பெரும் எதிர்விளைவுகளை சந்திக்க இருப்பதாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களும் தெரசா மேவின் ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். இந்நிலையில், பிரக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், ஒப்பந்தத்துக்கு எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், ஒப்பந்தம் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் அரசு கொண்டு வந்த தீர்மானம் படுதோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக தெரசா மே அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்த பின் பேசிய பிரதமர் தெரசா மே, ‘‘இந்த ஒப்பந்தத்தை அவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகி உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ள நினைப்பது என்று எதுவுமில்லை. பிரக்சிட் என்பது பொதுமக்கள் எடுத்த முடிவு. அதை நிறைவேற்ற அரசுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.

அதே சமயம், தெரசா மேவுக்கு எதிராக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பைன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்தது என்ன?

இங்கிலாந்து நாடாளுமன்ற விதிமுறைப்படி, அரசு கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தால், அடுத்த 3 அமர்வு நாட்களில் மாற்று திட்டம் அடங்கிய தீர்மானத்தை பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும். அதுவும் தோல்வி அடைந்தால், அடுத்த 3 வாரத்திற்குள் மற்றொரு ஒப்பந்தத்தை கொண்டு வர வேண்டும். ஆனால், மார்ச் 29க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் காலக்கெடு முடிவதால், அடுத்தடுத்து புதிய ஒப்பந்தங்களை கொண்டு வரும் கால அவகாசம் இல்லை. எனவே, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அந்நாட்டு வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: