சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று சிறுவர் முதல் பெரியர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று சுற்றுலா போன்ற பொழுது போக்கான இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் விளையாடி மகிழ்வார்கள். இதையடுத்து பொதுமக்கள் சிரமமின்றி சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வரும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும் 480 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது: காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு வெளிமாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இன்று மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள்.
இதையடுத்து மக்கள் சிரமமின்றி சுற்றுலா தலங்களுக்கு சென்று வர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 480 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.இந்த பேருந்துகள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களான அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட்நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம், முட்டுக்காடு, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலா பொருட்காட்சிகள் நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் சென்னை திரும்பும் நிலையில் இன்று முதல் பெருங்களத்தூர் போன்ற முக்கிய பகுதிகளில்அதி காலை 3.30 மணி முதல் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி