சென்னை: ஆவடியில் நள்ளிரவில் வீடு புகுந்து, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரையும், 3 வயது குழந்தையையும் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடி டேங்க் பேக்டரி சாலை, நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி (30). ஊசி, பாசிமணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (24). இவர்களது குழந்தைகள் பார்த்திபன் (5), சுஜாதா (3). பொங்கலை முன்னிட்டு, அருண்பாண்டி மகன் பார்த்திபனுடன் புதுச்சேரிக்கு ஊசி, பாசிமணி விற்பனை செய்ய சென்றுள்ளார். வீட்டில் ரோஜா, தனது மகள் சுஜாதாவுடன் இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 8 மணி வரை ரோஜா வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு அறையில் இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அருகில் அம்மிக்கல்லும் கிடந்தது. மேலும், ரோஜா அணிந்திருந்த ஆடைகள் களையப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து ரோஜாவை பலாத்காரம் செய்ததும், அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்ததும் தெரிந்தது.
இதுகுறித்து, அப்பகுதி நரிக்குறவர்கள் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பாரதி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதற்கிடையில், நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அங்கு திரண்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய கோரி கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர், தாய், மகள் இருவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, அதே பகுதியில் வசித்து வந்த வேலூர் மாவட்டம், காட்பாடி, இந்திரா நகரைச் சேர்ந்த வீரகுமார் (21) உள்பட சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரத்தக்கறையை மோப்பம் பிடித்தபடி ஆவடி டேங்க் பேக்டரி சாலை, சி.டி.எச் சாலை, நேரு பஜார் வழியாக ஆவடி காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு சந்தேகத்திற்கு இடமாக விசாரணைக்கு அழைத்து வந்த வீரகுமாரை நாய் கவ்வி பிடித்தது. இதனையடுத்து, போலீசார் வீரகுமாரை தனியாக அழைத்து விசாரணை தீவிர நடத்தினர். அதில், அவர் ரோஜா மற்றும் குழந்தை சுஜாதா ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிறகு வீரகுமாரை கைது செய்து பூந்தமல்லி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். ஆவடியில் நரிக்குறவ பெண், அவரது 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கொலையாளியை பிடித்த போலீசாரை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார். துடிக்க துடிக்க..தாய், மகள் கொடூர கொலை குறித்து போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:காட்பாடியை சேர்ந்த வீரகுமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உறவினர் நரிக்குறவர் நவீன்ராஜ் வீட்டில் குடிபுகுந்து உள்ளார். பின்னர், அதே பகுதியில் வசிக்கும் ரோஜா மீது வீரகுமாருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை ரோஜாவிடம் நெருங்கி சென்று பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அவர், வீரகுமாரை அருகில் சேர்க்காமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனால், ரோஜா மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வியாபாரம் செய்வதற்காக ரோஜாவின் கணவர் அருண்பாண்டி, மகனுடன் புதுச்சேரி சென்று விட்டார். அப்போது, வீட்டில் ரோஜா மட்டும் தனியாக இருப்பதை வீரகுமார் அறிந்துள்ளார். மேலும், வீட்டில் கதவு இல்லாததால் எப்போதும் திறந்தே கிடக்கும். இந்நிலையில், நள்ளிரவு 1.30 மணி அளவில் வீரகுமார் ரோஜா வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது அங்கு தனி அறையில் அவர் மகளுடன் அயர்ந்து தூங்கியுள்ளார். அவரை கொலை செய்து விட்டு பலாத்காரம் செய்யலாம் என வீரகுமார் முடிவு எடுத்து, அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து ரோஜா தலையில் போட்டுள்ளார். அப்படியே அந்த கல் உருண்டு குழந்தை சுஜாதா மீதும் விழுந்துள்ளது. இதில் இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர். அப்போது, வீரகுமார் ரோஜாவின் துணிமணிகளை களைந்து ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க அவரை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவர் தனது உடலில் ரத்தக்கறை படிந்ததால் ரோஜா வீட்டிலேயே குளித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு சென்று தூங்கி விட்டார். இதற்கிடையில், மோப்ப நாயும் அவரை கவ்வி பிடித்ததால் போலீசாருக்கு வீரகுமார் மீது ஏற்பட்ட சந்தேகம் உறுதியானது. இதனை அடுத்து, இறுதியில் அவரும் வேறு வழியின்றி போலீசாரிடம் ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி