டெல்லி: கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநிலத்தில் முக்கிய அமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரிதானதே, அங்கு பிரச்னை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் காங் - மஜத கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி பதவி ஏற்று கொண்டார். சில நாட்களுக்கு முன்னர், அமைச்சரவையில் காலியாக உள்ள 6 இடங்கள் நிரப்பப்பட்டது. இதற்கு பிறகே பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அமைச்சரவை விரிவாக்க திட்டத்தை லோக்சபா தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என மத சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் அறிவுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளுக்குள்ளேயே நெருக்கடி இருந்தது. துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் வசம் இருந்த உள்துறையை பறித்த சித்தராமையா, அதனை தனது நம்பிக்கைக்குரியவரான பாட்டீலுக்கு கிடைக்க உதவினார். மாநில காங்கிரசில் முக்கிய நபரான அமைச்சர் சிவக்குமாரிடமிருந்து மருத்துவ கல்வியை பறிக்க வேண்டும் என மேலிட தலைவர்களிடம் சித்தராமையா வலியுறுத்தியதுடன், மற்றொரு அமைச்சரான ரமேஷ் ஜர்கிஹோலியை நீக்கிவிட்டு, அவரது சகோதரர் சதீஷ் ஜர்கிஹோலியை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு நெருக்கமானவரான சிவக்குமாருக்கும் ரமேஷ் ஜர்கிஹோலியுடன் ஏற்கனவே மோதல் இருந்து உள்ளது. அவரும், சதீஷ் ஜர்கிஹோலியை அமைச்சராக ஒப்பு கொண்ட நிலையில், குமாரசாமி அரசை கவிழ்க்க தான் ரமேஷ் ஜர்கிஹோலியை நீக்க சித்தராமையா ஒப்பு கொண்டதை உணர்ந்தார். ஏனென்றால், ரமேஷ் ஜர்கிஹோலி, சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.