பெங்களூரு: கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாகவும், இதற்காக குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி அருகே உள்ள குருகிராமத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் தங்கியிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள், குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், விரைவில் அவர்கள் கர்நாடகத்திற்கு வருவார் என்றும் முதல்வர் குமாரசாமி கூறினார். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி