×

இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரம்: கைதானவர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை

சென்னை: இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் இந்து அமைப்புகளின் தலைவர்களான அர்ஜுன் சம்பத் மற்றும் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த ஆசிக், பைசல் ரகுமான், அன்வர், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகியோர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். மேலும் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இன்று காலை 6 மணி முதல், சென்னை பல்லாவரத்தில் சம்சுதீன், வியாசர்பாடியில் ஜாபர் சாதிக், ஓட்டேரியில் சலாவுதீன் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, 3 பேர் வீடுகளிலும் 10 மணியளவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் உக்கடத்தை அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், குனியமுத்தூரில் உள்ள அன்வர், வெரைட்டி ஹால் சாலை பகுதியில் ஆசிக் ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மூன்று குழுவாக பிரிந்து, ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்ட நிலையில், குனியமுத்தூரில் அன்வர் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்துள்ளது. இதேபோல், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : organizations ,detainees ,houses , Hindu organizations,murder plan,NIA officers,testing
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!