×

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் முரண்பட்ட தகவல்: மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கேட்டார்களா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் முரண்பட்ட தகவல் அளித்துள்ளார். இதனால், மீண்டும் அவரிடம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை  டாக்டர்கள், அதிகாரிகள், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள் உட்பட 151க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 10.10 மணிக்கு அவர் ஆஜரானார். மேலும், சம்மன் அனுப்பப்பட்ட போயஸ் கார்டனில் பணிபுரிந்த 3 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். சுகாதாரத்துறை செயலாளரிடம் பிற்பகல் 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன், அவரது மரணம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் இருந்ததா என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, சந்தேகம் இல்லை என்று ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

அதேபோன்று, ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்தும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்தீர்களா என ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று பதில் அளித்தார். இதே கேள்வியை சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையில் கேட்டபோது, அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவித்தேன் என்று கூறி உள்ளார். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு கேள்விகளை  கேட்டு அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டனர்.

பின்னர் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார். மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும், போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்களாக இருந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகா, சிவயோகம், பூமிகா ஆகியோரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஆணையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் கனகசபாபதி  அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை நேற்று ஆஜர்படுத்தினார். அப்போது, போயஸ்கார்டனில் சந்தேகப்படும்படியாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், 2016 செப்டம்பர் 22ம் தேதி போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியும் என்றும் வாக்குமூலம் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
5.12.2016 அன்று முதல் 2 மாதங்கள்  ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்தில் உங்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டிருக்கிறாரா என்று  சுகாதார துறை செயலாளரிடம் கேட்டபோது எதுவும் கேட்கவில்லை என்றார். வெளிநாட்டிற்கு கொண்டு செல்வது பற்றி என்ன முடிவு எடுக்கப்பட்டது எனக்கேட்ட போது சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கான தேவைகள் எழவில்லை என்றார்.
எய்ம்ஸ் மருத்துவர்களை யார் வரச்சொன்னது என கேட்டபோது, எனது முயற்சியால் தான் எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மனசாட்சிக்கு உட்பட்டு ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எனது தாயார் இறந்து விட்டார். குறுகிய கால விடுமுறையில் சென்று திரும்பிய நான், ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன் என கூறியதாக ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.  

உரிய விளக்கம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானேன். அப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டது, அப்போலோ அறிக்கைகள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏன் அழைத்து செல்லவில்லை என்றும் கேட்கப்பட்டது. அதற்கு எனக்கு தெரிந்த பதில்களை உரிய முறையில் விளக்கம் அளித்துள்ளேன். மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டதாக கூறினார்.

புதிய வக்கீல்
ஆணைய வழக்கறிஞரான மதுரை எஸ்.பார்த்தசாரதி விசாரணையில் இருந்து விலகுவதாக ஏற்கனவே கடிதம் அளித்திருந்தார். அவருடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டு வரும் திங்கட்கிழமை முதல் புதிய வழக்கறிஞர் விசாரணைக்கு ஆஜராவதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Health Secretary ,The Commission , Jayalalitha, treatment and health secretary
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...